Monday, February 18, 2013

உனை பிரிந்து...



கடல் நோக்கி செல்லும் கைவிடப்பட்ட அந்த பாதையின் கடையில்
கரைதட்டி இருக்கும் அந்த படகை கேட்டு பார்
என் தனிமை வரிகளை தளை தவறாமல் கூறும்..

வரை இல்லாமல் விரிந்து கிடக்கும் வானில் பிரம்மச்சரியாய்
சஞ்சரித்து வலம் வரும் கதிரவனிடம் கதைத்து பார்
என் வெறுமை நாட்களை வெருட்டென எடுத்துரைக்கும்..

வெறும் சுவரையே வருடக்கணக்கில் காட்டித்தவிக்கும்
என் வீட்டு நிலைக்கண்ணாடியிடம் விளம்பி பார்
என் சுருங்கிப்போன நிமிடங்களை விசும்பித்தீர்க்கும்....

என் வீட்டு காய்கறி நறுக்கும் கத்தியினை கேட்டு பார்
சமீபமாய் அது என் மணிக்கட்டு தோலுடன்
அடிக்கடி பூணும் சிநேகிதத்தை பூடகமாய் கூறும்...

ஊரோரம் மதுபான கடையின் கல்லாப்பெட்டி கூட
இரெண்டொரு முறை குறைபட்டுக்கொண்டது
இப்போதெல்லாம் என்னால் அதிக கணம் சுமக்கிறதென்று...

உனை வந்து சேரும் தென்றலிடம் கேட்டு பார்
நான் அவற்றை மிரட்டி உனை சேர அனுப்பிய
தினங்களை திகைப்பாய் கூறும்..

நாட்கள் நரகமாய் நகர்ந்துகொண்டிருப்பதை
நானெப்படி எடுத்துரைப்பேன்??
உன் நல்வரவை எண்ணி காத்திருக்கும் நான்..

No comments:

Post a Comment